Pages

Wednesday, June 20, 2012

பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - SPB 25



  • களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி-யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி-யின் பெர்சனல் பக்கங்கள்…
  • பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்!
  • முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது ‘சாந்தி நிலையம்’ படத்துக்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’!
  • பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ‘கேளடி கண்மணி’, ‘காதலன்’ இரண்டும் இன்றும் நினைவில் நிற்பவை!
  •  எஸ்.பி.பி. இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். ‘சங்கராபரணம்’, ‘ருத்ர வீணா’, ‘ஏக் துஜே கேலியே’, ‘மின்சாரக் கனவு’ என இவர் பாடியதெல்லாம் ஒலிபரப்பாகாத நாளே இல்லை!
  • ‘ஏக் துஜே கேலியே’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர். இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!
  • இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் ‘வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்கவைக்கும்!
  •  சுத்தமான சைவ உணவுப் பழக்கம். இவ்வளவு பெரிய ஆகிருதிகொண்ட இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்… இஷ்ட உணவு!
  • இதுவரை 42,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்!
  • எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்! 
  • மூச்சுவிடாமல், ‘கேளடி கண்மணி’யில் ‘மண்ணில் இந்தக் காதல்’, ‘அமர்க்களம்’ பட ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்! 
  • எஸ்.பி.பி-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, ஜேசுதாஸ். முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார். ‘டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது’ எனப் பாராட்டி மகிழ்வார்!
  • எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் ‘ஆயிரம் நிலவே வா’. அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி. அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். ‘ரெஸ்ட் எடு. நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர். பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய். மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு!’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!
  • கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி-யின் தணியாத தாகம்.!
  • பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், ‘ராஜா… ராஜாதான்’ என்கிற கட்சி!
  • ‘மழை’ படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலைப் பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்குள் அடியெடுத்துவைத்து, பாடி, வெளியேறியது எல்லாம் 12 நிமிடங்களில் முடிந்துவிட்டது!
  • கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி. இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, சச்சின் தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்!
  • ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்! அவர் இசையமைத்து, நடித்த படம் ‘சிகரம்’.
  • பிறந்த தினம் ஜூன் 4, 1946. இன்றும் பிஸியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை! 
  • ‘முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!
  • சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை. ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார் 
  • எஸ்.பி.பி. பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்!
  • எஸ்.பி.பி-யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு, இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!
  • தெலுங்குப் படங்களில் நிறைய ‘ராப்’ பாடல்கள் எழுதியவர். ‘கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு’ என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
  • கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

SPB பற்றி அறியாத பல தகவல்கள்... வாழ்த்துக்கள்... நன்றி !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

Anonymous said...

2012 ஆம் வருசத்திய பதிவா இது? விடு பட்டு போய் விட்டது. வெற்றியாளர்களை அறிந்து கொள்ளும் நல்லதொரு வலைப்பூ வாழ்த்துக்கள்.

Anonymous said...

காதல் ஓவியம் பாடல் பதிவில் வைரமுத்து அவர்கள் பதிவறைக்கு வெளியே நின்று பாடிவிட்டு வெளியே வந்த பாலுவை தன் இரு கைகளையும் காட்டி புல்லரிக்க வைத்துவிட்டீர் என்று பாலுஜியை கட்டி அணைத்துகொண்டாராம். அறிய பாடல்களுக்கு இவ்வலைப்பூவில் சென்று கேட்கலாம்.www.myspb.blogspot.com

Post a Comment